Tuesday, April 19, 2011

கிழக்குப் பல்கலைக்கழகம் இன்று மீண்டும் ஆரம்பம்…

காலவரையறையின்றி மூடப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தின் விரிவுரைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கலாநிதி பிரேமகுமார் தெரிவித்தார். வந்தாறுமூலை வளாகத்தில் அமைக்கப்பட்டிரு க்கும் பொலிஸ் காவலரணை நீக்குமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தை காலவரையறையின்றி மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்தது. இந்த நிலையில் விரிவுரைகளை இன்று முதல் ஆரம்பிக்க தீர்மானித்திருப்பதாகவும், அனைத்து மாணவர்களையும் விரிவுரைகளுக்குச் சமுகமளிக்குமாறு அறிவித்திருப்பதாகவும் பதில் உபவேந்தர் தெரிவித்தார். பொலிஸ் காவலரணை அகற்றுவது தொடர்பாக பொலிஸ் தரப்பினருடனும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும் எனினும், பொலிஸ் காவலரணை அகற்றாமல் கடமையிலிருக்கும் பொலிஸாரைத் தேவையேற்படும் பட்சத்தில் மாற்றமுடியமென்று தமக்குப் பதில் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார். விடுதிகளிலுள்ள மாணவர்கள் நேற்று மாலைக்குள் விடுதி திரும்ப வேண்டுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த கலாநிதி பிரேமகுமார் இன்று முதல் விரிவுரைகள் ஆரம்பிக்கப்படும் என்று கூறினார்.

No comments: